"தேமதுரைத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்"
"அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது" என்றார் ஒளவையார் இத்தகைய மனித வாழ்ககை பிறப்புக்கும், இறப்புக்கும் இடைப்பட்டதாக விளங்குகிறது. இவ்வாழ்க்ககையில் எத்தனைபேர் உலகோர் போற்றும் வண்ணம் உயர்ந்து நின்று வாழ்க்கையில் சாதனை படைத்துள்ளனர் என்றால், எண்ணிலடங்கா மனிதர்கள் மத்தியில் ஒரு சிலரே என விரல்விட்டு எண்ணிவிடலாம்.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம் அன்னப்பன்பேட்டை பெருநிலக்கிழாரும் தஞ்சாவூர் கரந்தையில் வசித்து வந்தவருமான திரு. மொ. சா. சண்முகசுந்தரம் பிள்ளை. திருமதி. காமாட்சியம்மாள் தம்பதியினரின் கடைசி மகனாய் 24.10.1940 ல் பிறந்தவர் திரு. ச. இராமநாதன் அவர்கள்.
கரந்தைத் தமிழ்ச் சங்க நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் இராதா கிருட்டிணத் தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை கல்வி பயின்று, பின்னர் உமாமகேசுவர உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்றார். அடுத்து தூய பேதுரு பள்ளியில் கல்வி பயின்றார். தஞ்சாவூர் பூண்டி புட்பம் கல்லூரியில் புகுமுக (P.U.C) வகுப்புப் பயின்றார். தொடர்ந்து தஞ்சாவூர், சாமியப்பா கூட்டுறவுப் பயிற்சி நிறுவனத்தில் கூட்டுறவு பட்டயப் பயிற்சி பெற்றுத் தேர்ந்தார்.
தமிழவேள் அவர்களின் காலத்திற்குப் பிறகு, கரந்தைத் தமிழ் சங்கம் மெல்ல மெல்ல தன் பொலிவினை இழக்கத் தொடங்கியது. 1969 முதல் 1982 வரை செயல் இழந்து இருந்த கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு தலைமைப் பொறுப்பேற்று, அரிதில் முயன்று, புத்துயிர் ஊட்டி செயற்பட வைத்தார் திரு. ச. இராமநாதன் அவர்கள். இவர் சாதித்த சாதனைகள் அளவிடற்கரியன. 1983-ல் இக்கட்டான சூழ்நிலையில் யாரும் பொறுப்பேற்கத் தயங்கிய தருணத்தில் தலைவராய் தைரியத்துடன் வந்தமர்ந்த காவலர் இவர்.
இவர் 1983 முதல் 1997 வரை 14 ஆண்டுகள் சங்கத் தலைவராகவும், 2000 முதல் செயலாளராகவும் பொறுப்பேற்றுச் செய்துள்ள, மற்றும் செய்து வரும் பணிகள் ஏராளம்.
கீற்றுக் கொட்டகைகளாக இருந்த வகுப்பறைகள் கட்டிடங்களாக உருப்பெற்றன.
புலவர் கல்லூரி பல்வேற துறைகளைக் கொண்ட கலைக்கல்லூரியாக உருவெடுத்தது.
விளையாட்டுத் திடலுக்கு சிமெண்ட் பாலம் அமைத்தது.
வடவாற்றுக் கரைக்குத் தடுப்புச் சுவர் எடுத்தது.
சங்க விளையாட்டுத்திடலுக்கு சுற்றுச்சுவர் எழுப்பியது.
கலைக்கல்லூரிக்கு மிகப்பெரிய விடுதியும், மிகப்பெரிய நூலகமும் அமைத்தது.
கரந்தைத் தமிழ்ச் சங்க சுந்தர விநாயகர் கோயிலுக்குக் குடமுழுக்கு நிகழ்த்தியது.
தமிழ்மொழியை உயர்தனிச் செம்மொழயாக நடுவணராக அறிவிக்க மாபெரும் பேரணியொன்று நடத்தியது
ஆன்றமைந்த சான்றோர்கள் சொற்பொழிவாற்றிய தமிழ்ப் பெருமன்றத்தைச் சீரமைத்தது.
தமிழகத்தில் உள்ள சிறப்பும் பெருமையும் மிக்க தமிழ்ச் சான்றோர்கள் அனைவரையும் வரவழைத்துச் 'செம்மொழி கோரிக்கை மாநாடு நடத்தியது.
தமிழைச் செம்மொழியாக்க தமிழ்நாடெங்கிலும் உள்ள நகரமக்கள் மட்டுமின்றி, சிற்றூர், கிராமம் என பலவிடங்களிலும் உள்ள மக்கள் செம்மொழி என்றால் என்ன? என்பதை அறியச் செய்யும் வகையில் தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று ஒரு கோடிக் கையெழுத்து இயக்கம் தொடங்கி அதனை நிறைவேற்ற தமிழ்மொழி "செம்மொழி" என்ற உயர்ந்த இடத்தைப் பெறுவதற்கு உறுதுணையாக இருந்தது.
உமாமகேசுவரனார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி தொடங்கியது.
உமாமகேசுவரனார் கல்வியியல் கல்லூரி தொடங்கியது.
சங்க விளையாட்டுத்திடலை பல இலட்சம் ரூபாய் செலவில் மேடு பள்ளம் சமன் செய்து மின்விளக்குகள் அமைத்துச் சீர்படுத்தியது.